Monday, April 6, 2020

25 பூந்தோட்ட நகர்

விளையாட்டு போல, நாங்கள் இப்போது குடி இருக்கும் எங்கள் கோவை வீடு கட்டி, இருபத்து மூன்று வருடங்கள் வேகமாக ஓடி விட்டது . எங்கள் பையனை விட ஒரு வயது கம்மி . சுமார் நாற்பது வருடம் வாடகை வீட்டில் இருந்த அனுபவத்தால் ,சொந்த வீடு அப்பாவின் மிக பெரிய கனவாய் இருந்திருக்கும், அவர் அப்போது வாய் திறந்து சொன்னதில்லை, இப்போது புரிகிறது.

நான் கல்லூரி படிப்பு முடித்த சமயம் 89ல் அவரின் சேமிப்பை வைத்து என் பெயரில் ஒரு கிரவுண்டு நிலம் வாங்கியிருந்தார்.இப்போது நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது ,எது என் பெயரில் வாங்க தூண்டியது என்று.

திருமணம் முடிந்து பையன் பிறந்த பிறகு 97ல் வேலையும் சம்பளமும் நிலையாக இருந்ததால் என்னை வீடு கட்டலாமா என்று கேட்டதற்கு நான் என்ன பதில் சொன்னேன் என்று இன்றும் ஞாபகமில்லை, ஆனால் எதிர்மறையாக என்று நினைக்கிறேன் .

அலுவலகத்தில் எனது மேலதிகாரி மணி சார் ஒரு நாள் அவரின் அறைக்கு அழைக்க, சென்று பார்த்தால் அங்கு அப்பா . என்னப்பா, உன் அப்பா வீடு கட்டலாம் என்றால் ஒன்னும் பேச மாட்டேன் என்கிறாயாமே என சிரித்தபடி வினவ . நான் என்னிடம் ஒன்றும் சேமிப்பு இல்லை வீடு கட்ட சுமார் ஐந்து லட்சமாவது ஆகுமே எப்படி புரட்டுவது என இழுத்தேன் , உடன் அப்பா , என் ரிடர்ய்மென்ட் பணம் ரெண்டு லட்சம் உள்ளது அப்புறம் கொஞ்சம் வங்கி கடன் வாங்கினால் போதுமே எனக்கூற ,மணி சாரும் வங்கி கடனுக்கு ஆபிஸ் சம்மதம் வாங்கி தருவதாக,சம்மதித்தார் .

நானும் நண்பர்களுமே வீட்டு பிளான் மற்றும் கம்பி டிசைன் செய்தோம். அப்ரூவ்டு சைட் மற்றும் பஞ்சாயத்து என்பதால் எளிதாக ப்ளான் அப்ப்ரூவல் ஆயிற்று பேங்க் லோன் வாங்குவதில் பயங்கர சிக்கல் .அதுபற்றி தனி கதை எழுதும் அளவிற்கு அது பெரிய கதை . மூலபத்திர நகல் கிடைக்கபெற நாய் படாத பாடு . வீட்டில்அருகில் இருந்த மலையாளி வைத்திருந்தும் நகலை பிரதி எடுக்க தரவில்லை . செல்போன் மற்றும் சமூகவலைதளம் இல்லா காலங்களில் பதினாறு பத்திர நகல்களை சம்மந்தப்பட்ட ஐந்து நபர்களிடம் தேடி வாங்குவதற்குள் ஆறுமாதம் ஆகிவிட்டது. ஒருவழியாக ஒரிஜினல் பத்திர அடமானம் மூலம் பதினாலு சதவீத வட்டியில் லோன் சேங்சன் ஆயிற்று.

ஒரு நல்ல நாளில் பூமிபூசை போட்டு வீடுகட்டுவது ஆரம்பமாயிற்று . சாமான்கள் நாங்களே வாங்கி லேபர் காண்ட்ராக்ட்டில் கட்டுவதாக ஏற்பாடு .பக்கத்து காலி இடத்தில் ஒரு ஒரு சிமெண்ட் கொடௌன் மற்றும் என்னுடைய மாமா முழுப்பொறுப்பையும் கவனித்துகொள்ள அங்கேயே தங்கி கொண்டார்.அப்பாவும் அம்மாவும் தினமும் டவுனில் எங்கள் வாடகை வீட்டில் இருந்து உணவு சமைத்து எடுத்து வந்து வீடு கட்டுவதை பார்த்து கொண்டனர்.

வீட்டை கட்டி பார் கல்யாணம் செய்து பார் என்று சும்மாவா சொன்னார்கள் . எங்களுடையது களி மண் பூமி , அஸ்திவாரம் பன்னிரண்டு அடி போனது , மேலும் கட்டிய கழிவு நீர் தொட்டியில் விரிசல் மற்றும் என்னுடைய அலட்சியத்தால் பதினாறு அடி கொண்ட ஆறு பீம்களில் கான்க்ரீட் கம்பி அளவு பத்தாமல் விரிசல் மேலும் தென்மேற்கு மூலையில் ஒரு பில்லர் இறங்கிவிட்டது. இவையெல்லாம் குடும்பத்தில் அனைவருக்கும் பயங்கர சிரமத்தை தர . கட்டிட தவறுகளை சரி செய்தது தனிக்கதை .

இந்நிலையில் , பில்டிங் எஸ்டிமேட் ஐந்து லட்சத்தில் இருந்து ஆறரை லட்சமாக உயர்ந்தது . அப்பாவுடைய , பணம், லோன் பணம் காலியாக, என்னுடைய கைச்செயின், பையனின் அரைஞான் கொடி , மனைவியின் டாலர் செயின் சில மோதிரங்கள் என ஒவ்வொன்றாக விற்றும் பத்தவில்லை . மேலும் சில நகைகள் கூட்டுறவு வங்கிக்கு அடமானம் போயின. ஒருவழியாக வீட்டை மட்டும் முடித்து, சுற்று தளம் , காம்பவுண்டு சுவர் , முன் கேட் முடிக்க வசதியில்லாமல் ,வீட்டை கிரக பிரவேசம் செய்தோம் ..

புதியவீட்டில் குடிபெயர்ந்து , ஒரு வருடம் ஓடியபின் , கோவை குண்டுவெடிப்பின் காரணமாக எங்கள் கம்பெனி வேலைகள் நின்றுபோக , பம்பாய்க்கு மாற்றலாகி போக நிர்வாகம் கட்டயப்படுத்த, பிடிக்காமல் வேலையை ராஜினாமா செய்தேன் . ஆறுமாதம் சரியான வேலை இல்லை நடுவில் கடன் அட்டையில் வாங்கிய கடன்தொகை கட்டமுடியாமல் மிரட்டல் , குடும்ப செலவிற்கு பத்தும் பத்தாமலும் சுமார் இரண்டு வருட வாழ்க்கை .

வெறிகொண்ட மாதிரி இன்டர்வியூவிற்கு படித்து கஷ்டப்பட்டு எல் அன்ட் டி பணி கிடைத்தது கஷ்டம் கொஞ்சம் குறைந்தது. இருந்தும் பேங்க் லோன் என்னை சிரமப்படுத்த, மதுரையில் எங்களுக்கு இருந்த அருமை இடத்தை சொற்ப விலைக்கு விற்று என் லோனை அப்பா அடைத்தார்.ஒருவழியாக வீட்டு கடன் சுமையும் பொருளாதார சுமையும் முடிவுக்கு வந்தது . அப்பா ஒரு ஆளாகவே அப்போதைய என் கடன் பிரச்சனைகளை சரி செய்தார்

நடுவில் கோவையைவிட்டு சென்னைக்கு குடிபெயர்ந்து விடலாம் என எங்களின் வீட்டை விற்பதற்கு ஏற்பாடெல்லாம் செய்து விட்டேன் , ஒரே பையன் என்பதால் பெற்றோருக்கும் விறுப்புவெறுப்பு இல்லாமல் சம்மதிக்க நல்லவேளையாக நண்பர் ஒருவர் அறிவுறுத்தலின் பேரில் யோசனையை தள்ளி போட்டோம்.பின்னர் நான் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்று விட சுமார் பதினாறு ஆண்டுகள் எங்கள் வீட்டில் நான் தங்கவே இல்லை , இதோ கடந்த சுமார் ஒன்றை ஆண்டுகளாக எங்கள் வீட்டில் தொடர்ந்து இருந்து வருகிறேன் .

வீடு என்பது செங்கலும் கலவையும் கான்க்ரீட்டும் பெயிண்டும் கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடம் , ஆனால் அதில் உள்ள இல்லம் என்பது ,குடும்பங்களின் பந்தம் பாசம் நேசம் சுகம் துக்கம் கோபம் அழுகை ஆற்றமை நிம்மதி ஆற்றல் என பல உணர்வுகளை க்ரகித்துகொண்டு வெளியே எதையும் காட்டிகொள்ளாமல், நம்மை காக்கும் காவல் தெய்வம். சிறுவயதில் அப்பாவின் முதுகை பிடித்துகொண்டு தூங்கினாற்போல் ,அப்பாவினால் எங்களுக்கு கிடைத்த எங்கள் இல்லச்சுவற்றை விரல்களால் வருடியபடி தினமும் தூங்கிப்போகிறேன்.

1 comment:

KILLERGEE Devakottai said...

அருமையாக சென்னீர்கள் நண்பரே வீடு என்பது ஒவ்வொரு நடுத்தரவர்க்க மனிதருக்கும் ஓர் கனவுதான் - கில்லர்ஜி

25 பூந்தோட்ட நகர்

விளையாட்டு போல, நாங்கள் இப்போது குடி இருக்கும் எங்கள் கோவை வீடு கட்டி, இருபத்து மூன்று வருடங்கள் வேகமாக ஓடி விட்டது . எங்கள் பையனை விட ஒரு...